குட்கா முறைகேடு வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை செங்குன்றத்தில் உள்ள மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா குடோன் மற்றும் அவரது வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கைப்பற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
குட்கா குடோன் அதிபர் மாதவராவ், அவரது பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, மற்றும் சீனிவாசராவ் ஆகியோர் கைது செய்யப்படடனர். குட்கா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக கலால்துறை மற்றும் உணவுத்துறை அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

குட்கா பொருட்கள்
இந்த முறைகேடு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனின் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடந்த மாதம் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட தொழிலதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் பெயர் மட்டுமே இருந்தது.
ஆனால், தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும், தேவைப்பட்டால் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு கடந்த வாரமே விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்ததால், உதவியாளர் சரவணன் மட்டும் ஆஜரானார்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜயபாஸ்கரும், ரமணாவும் சனிக்கிழமையான இன்று ஆஜராகுமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Watch: பா. ரஞ்சித்தின் தலித் அரசியலா..?
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.