குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னரும் பிறந்த பெண் குழந்தைக்கு பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்த தனம் தனக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதால் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2014ம் ஆண்டு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இந்த நிலையில் மீண்டும் தனம் கர்ப்பம் தரித்தார். அவரை பரிசோதித்த கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கடந்த 2017ம் ஆண்டு தனத்திற்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து,
தனக்கு ரூ.10 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி தனது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மருத்துவரின் கவனக்குறைவால்தான் மனுதாரருக்கு 3-து குழந்தை பிறந்துள்ளது. எனவே, அவருக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். என்றும் 3வது பெண் குழந்தைக்கு அரசின் அனைத்து சலுகைகளையும் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வாதிட்டார்.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வியடையவும் வாய்ப்புள்ளது. இந்த விஷயம் மனுதாரருக்கும் அறுவை சிகிச்சைக்கு முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், கர்ப்பமானது தெரிந்தவுடன் வந்திருந்தால் உரிய மருத்துவ சிகிச்சை தரப்பட்டிருக்கும். எனவே, அவர் இழப்பீடு கோர முடியாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தபிறகு மீண்டும் கர்ப்பம் தரிக்காது என்று மனுதாரர் முழுமையாக நம்பியுள்ளார். மருத்துவர்கள் உரிய முறையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவில்லை என்பது தெளிவாகிறது. 3வது பெண் குழந்தை பிறந்ததால், மனுதாரர் அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்துவைப்பது வரை பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
மனுதாரர் உடனடியாக அணுகவில்லை என்று அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறுவதை ஏற்க முடியாது. 2 பெண் குழந்தைகளுக்கு மட்டும் அரசு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் 3வது குழந்தைக்கு எப்படி அரசின் சலுகையை பெற முடியும்? அதனால், அந்த குழந்தை தேவையில்லா குழந்தையாகிவிடுகிறது.
தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை மனுதாரர் தானாக முன்வந்து தேர்வு செய்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அதனால், அவர் இழப்பீடு பெற தகுதியுள்ளவராக நீதிமன்றம் கருதுகிறது. எனவே, மனுதாரருக்கு தமிழ்நாடு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மனுதாரரின் 3-வது குழந்தையின் கல்வி செலவு முழுவதையும் அரசு ஏற்க வேண்டும். 3வது குழந்தைக்கு 21 வயது ஆகும் வரையிலோ அல்லது பட்டப்படிப்பு முடிக்கும் வரையிலோ அந்த குழந்தையின் கல்வி கட்டணம், பாடபுத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்காக மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் கணக்கிட்டு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை அரசு வழங்க வேண்டும். மனுதாரரின் 3-வது குழந்தையையும் பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டத்தில் அரசு சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.