சென்னையிலிருந்த அஸ்திரேலியாவுக்கு மெத்தம்பேட்டமைன் போதைப் பொருளை வளையல் பெட்டிக்குள் மறைத்து வைத்து கொரியர் மூலம் அனுப்ப முயன்ற 5 பேர் கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.
சென்னை மண்ணடி பகுதியில் போதை பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வடக்கு மண்டல இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். துறைமுகம் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் போதைப் பொருள் வாங்குபவர்கள் போல் மண்ணடி பகுதியில் சுற்றி வந்தனர்.
அப்போது ஜாகிர் உசேன் என்பவர் போதைப் பொருள் வேண்டுமா என கேட்க அவரை சுற்றி வளைத்துப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் முகம்மது சுல்தான், நாசர், ஜுனைத் மற்றும் அசாரூஆகிய 5 பேரை அடுத்தடுத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
போதைப் பொருள் விற்பனை செய்வதால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க இவர்கள் கூலித் தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளனர். விலையுயர்ந்த மெத்தம்பெட்டமைன் மற்றும் ஆம்பிடமைன் போன்ற போதை பொருட்களை மொத்தமாக வாங்கி சந்தேகம் ஏற்படாத வகையில் விற்று வந்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு மொத்த விற்பனையும் செய்து வந்த இவர்கள், கூரியரில் சரக்கு விமானம் மூலம் இலங்கை வழியாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் கடத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவ்வாறு கடத்துவதற்காக வைத்திருந்த 2 கிலோ மெத்தம்பேட்டமைன், இரண்டரை கிலோ ஆம்பிடமைன் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்டவர்கள் இந்த போதைப் பொருட்களை வளையல் பெட்டிக்குள் மறைத்து, கொரியர் மூலமாக அனுப்ப திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புடையது என தெரியவந்துள்ளது. போதைப் பொருளை கடத்துவதற்காக வைக்கப்பட்டிருநத் வளையல் பெட்டிகளை கைது செய்யப்பட்ட அசார் தங்கியிருந்த லாட்ஜில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், போதை பொருட்களை விற்க பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 8 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்கள் வேலூரில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் இருந்து சட்டவிரோதமாக போதைப் பொருட்களை வாங்குவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர் அவர்களது செல்போனை ஆய்வு செய்ததில் வெளிநாட்டு தொடர்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளதால், அவற்றை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய நபர்கள் இருவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai Police, Crime News, Smuggling, Tamil Nadu, Tamil News