அதிமுகவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒற்றை தலைமை விவகாரம் தற்போது ஒரு புள்ளியை வந்து அடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் உள்ள எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக முழுமையாக வந்துள்ளது. எனவே விரைவில் பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தி முடிப்பதற்கான பணிகளை அதிமுக தொடங்கியுள்ளது. இதற்காக மார்ச் 9ஆம் தேதி அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
பொதுச் செயலாளர் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்வதற்கான இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. 11-07-2022 வரை அதிமுகவின் உறுப்பினராக இருந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படும். பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதன் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய இருவரும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ஏற்கனவே பொதுக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே ஏப்ரல் மாத இறுதிக்குள் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடித்து கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்க இருக்கிறார்.
இதையும் படிங்க; இடைத்தேர்தல் தோல்வி... இபிஎஸ் பதவி விலகக் கோரி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவிகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தது இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் கட்சியில் சட்ட திட்ட விதிகள் மாற்றம் செய்யப்பட்டு பொதுச்செயலாளர் பொறுப்பு எவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற விதியும் மாற்றம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழைய சட்ட திட்ட விதிமுறைகள்
விதி 20அ : ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்
திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்
விதி - 20அ : கழகப் பொதுச் செயலாளர்
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதற்கு பதில் "கழகப் பொதுச் செயலாளர்" என்று மாற்றி அமைக்கப்பட்டு, விதி திருத்தப்படுகிறது.
பழைய சட்ட திட்ட விதிமுறைகள்
விதி 20அ பிரிவு -1
கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுபவர்கள், தேர்தல் நடைபெறும் நாளுக்கு முன்பாக, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருந்திடல் வேண்டும்.
திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்
விதி 20அ பிரிவு - 1
வரையறுக்கப்பட்ட தகுதிகளைப் கழக சட்ட திட்ட விதிமுறைகளில் | பூர்த்தி செய்துள்ள கழக உறுப்பினர்கள், பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிடத் தகுதி உடையவர் ஆவார்கள்.
a) கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் உறுப்பினர், கழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
b) கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் உறுப்பினர், தலைமைக் கழகப் பொறுப்புகளில் குறைந்தது தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
c) கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் உறுப்பினரின் பெயரை, கழக அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களில், குறைந்தது 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். மற்றும் கழக அமைப்பு ரீதியாக உள்ள 10 மாவட்டங்களில் குறைந்தது மாவட்டக் கழகச் செயாளர்கள் வழிமொழிய வேண்டும்.
மாவட்டக் கழகச் செயலாளர், ஒரு வேட்பாளருக்கு மட்டும் தான்
முன்மொழியவோ அல்லது வழிமொழியவோ
வேண்டும்.
பழைய சட்ட திட்ட விதிமுறைகள்
விதி 20 அ பிரிவு - 2 :
கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.
திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்
விதி 20 அ பிரிவு - 2 :
பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.
பழைய சட்ட திட்ட விதிமுறைகள்
விதி - 20அ பிரிவு - 3
தேர்ந்தெடுக்கப்படும் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஐந்து ஆண்டுகளுக்கு இப்பொறுப்புகளில் நீடிப்பர்.
திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்
விதி - 20அ பிரிவு - 3:
தேர்ந்தெடுக்கப்படும் கழகப் பொதுச் செயலாளர் ஐந்து ஆண்டுகளுக்கு இப்பொறுப்புகளில் நீடிப்பார்.
பழைய சட்ட திட்ட விதிமுறைகள்
விதி 20அ பிரிவு - 4:
கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் கழக சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு, தங்கள் கடமைகளையும் பணிகளையும் பொறுப்புகளை வகிப்போர்,
இணைந்தே நிறைவேற்றுவர்.
திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்
விதி - 20அ பிரிவு - 4:
கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பை வகிப்பவர், கழக சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு, தனது கடமைகளையும், பணிகளையும் நிறைவேற்றுவார்.
பழைய சட்ட திட்ட விதிமுறைகள்
விதி - 20அ பிரிவு - 5:
கழகத்தின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிப்பவர்கள் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆவர்.
திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்
விதி - 20அ பிரிவு - 5:
கழகத்தின் நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிப்பவர் கழகப் பொதுச் செயலாளர் ஆவார்.
பழைய சட்ட திட்ட விதிமுறைகள்
விதி 20.அ பிரிவு 6:
கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அவைத் தலைவர், பொருளாளர், தலைமைக் கழகச் செயலாளர்கள். மாவட்டச் செயலாளர்கள், நியமன உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டு தலைமைச் செயற்குழுவை அமைப்பர்.
திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்
விதி - 20.அ பிரிவு - 6:
அவைத் தலைவர், பொருளாளர், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நியமன உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்டு கழகப் பொதுச் செயலாளர் தலைமைச் செயற்குழுவை அமைப்பார்.
பழைய சட்ட திட்ட விதிமுறைகள்
விதி 20அ பிரிவு -7:
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்படும் செயற்குழு உறுப்பினர்களும், தலைமை கழக செயலாளர்களும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் வரையில் நீடிப்பார்.
இதற்கிடையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் விடுவிக்கப்பட்டாலோ இடைப்பட்ட காலத்தில் அதாவது புதிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வரையில் முந்தைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பதவியில் நீடித்து கட்சிப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
திருத்தி அமைக்கப்பட்ட சட்ட திட்ட விதிமுறைகள்
விதி 20அ பிரிவு -7:
கழக பொதுச்செயலாளர் நியமிக்கப்படும் செயற்குழு உறுப்பினர்களும் தலைமைக் கழகச் செயலாளர்களும் அந்த பொதுச் செயலாளர் பதவிக்காலம் வரையில் நீடிப்பார்கள்.
இடைப்பட்ட காலத்தில் அதாவது பொதுச் செயலாளர் விடுவிக்கப்பட்டாலோ நீக்கப்பட்டாலோ செயல்படாத நிலை ஏற்பட்டாலோ அல்லது அப்பொறுப்பு காலியாகும் நிலை ஏற்பட்டாலோ புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளும் வரையில் இடைக்கால பொதுச் செயலாளர் ஒருவர் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்படுவார். இடைக்கால பொதுச் செயலாளர் கட்சியின் பொதுச் செயலாளர் பணிகளையும் கட்சி நிர்வாகத்தையும் தொடர்ந்து நடத்தி வருவார்.
இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்ய வேண்டி முந்தைய பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக செயலாளருக்கு உடனடியாக பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. மேற்படி கூட்டம் 30 நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும்.
தற்போது கட்சி இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் தேர்வுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அவரை தவிர வேறு யாரும் போட்டியிடாத சூழல் தற்போது கட்சிக்குள் உள்ளதால் அவரே விரைவில் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். அதற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டம் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK, Edappadi Palaniswami