அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலில் கவனம் செலுத்தவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர் மாஃபா பாண்டியராஜன். அதன்பின்னர் தே.மு.தி.க-வில் இணைந்து 2011 சட்டமன்றத்தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்டு வெற்றிக்கண்டார். அதிருப்தியின் காரணமாக தே.மு.தி.க-வில் இருந்து விலகியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக ஆவடி தொகுதியில் களம்கண்டு வெற்றியும் பெற்றார். அ.தி.மு.க ஆட்சியில் பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராக பதவி வகித்தார். அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை செயலாளராக உள்ளார்.
பாண்டியராஜன் அரசியலுக்கு வருவதற்கு முன்பு மாஃபா என்ற பெயரில் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிய காரணத்தால் நிறுவன பணிகளில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் தி.மு.க வேட்பாளர் நாசரிடம் தோல்வியை தழுவினார்.
பாண்டியராஜன் மீண்டும் நிறுவனப்பணிகளில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். மாஃபா மற்றும் சி.எல் மனிதவள நிறுவனத்தின் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். , “ நான் அமைச்சராக இருந்ததால் என்னால் நிறுவனப் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் போனது. தீவிர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். தொழிலை கவனிக்க முடியாமல் போனது. இப்போது தொழிலில் கவனம் செலுத்த முடிவு செய்து மீண்டும் பொறுப்பேற்றுள்ளேன். அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொழிலில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். அரசியலுக்கு கொஞ்சம் ஓய்வு அளிக்கவுள்ளேன். அதேநேரத்தில் அதிமுகவில் உள்ள பொறுப்புகளில் தொடர்வேன்” எனக் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.