முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிரபல மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 7 பேருக்கு தூக்கு, 2 பேருக்கு ஆயுள்

பிரபல மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 7 பேருக்கு தூக்கு, 2 பேருக்கு ஆயுள்

உயிரிழந்த மருத்துவர் சுப்பையா

உயிரிழந்த மருத்துவர் சுப்பையா

சென்னையில் பிரபல மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டிக் கொல்லப்பட்டார். தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நிலத்தை சுப்பையாவும், பொன்னுச்சாமியும் உரிமை கோரி வந்த நிலையில் அந்த நிலம் மருத்துவர் சுப்பையாவுக்கு சாதகமாக கீழ் நீதிமன்றத்தில் தீர்ப்பானது.

இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக இருந்து வந்த முன்பகை காரணமாக மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்டதும் இதற்கு அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், மகனும் வழக்கறிஞருமான பாசில், மற்றொரு மகன் பொறியாளர் போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ருவர் ஆகிவிட்டார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது. அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் ஜூலை 28 ம் தேதி முடிவடைந்த நிலையில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பை தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அல்லி குற்றஞ்சாட்டப்பட்ட ஐய்யப்பன் தவிர மற்ற 9 பேர் குற்றவாளிகள் என அழைக்கப்படும் அறிவித்தார்.

9 பேருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. குற்றவாளிகள் தரப்பில் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டனர். இதையடுத்து தண்டனையை அறிவித்த நீதிபதி அல்லி, குற்றவாளிகள் பொன்னுசாமி, வழக்கறிஞர் பாசில், வில்லியம், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு கொலை மற்றும் கூட்டுசதி பிரிவுகளில் தூக்கு தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ஐயப்பன் என்பவர் அரசு சாட்சியானதால் அவருக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.

    First published:

    Tags: Murder case