சினிமா பாணியில் போலி ரைடு! அலேக்காக 5 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கத்தை ஆட்டையை போட்டு சென்ற மர்ம நபர்கள்..
சினிமா பாணியில் போலி ரைடு! அலேக்காக 5 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கத்தை ஆட்டையை போட்டு சென்ற மர்ம நபர்கள்..
வெள்ளை நிற காரில் வந்தவர்களின் சிசிடிவி காட்சிகள்
coimbatore | குட்கா சோதனை என்ற பெயரில் ஐந்து பவுன் நகை 75 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை ஒரு கும்பல் திருடியுள்ளது. இந்தச் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சூலூர் அருகே போலீஸ் எனக்கூறி சோதனை செய்வதுபோல் நாடகமாடி 5 பவுன் நகை மற்றும்75 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சூலூர் கலங்கல் பாதையில் குருவம்மாள் நகர் பகுதியில் தாய் திலகம் மகன் கவியரசன் ஆகியோர் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். மேலும் கடையின் எதிரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் கவியரசு மட்டும் கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது மதியம் வெள்ளை நிற காரில் 4 பேர் வந்துள்ளனர். தாங்கள் போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள் கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது எனவும் கடையை சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
காரில் ஒருவர் அமர்ந்திருந்த நிலையில் 3 பேர் கடைக்குள் சென்று சோதனையிட்டுள்ளனர். கடையில் செய்த சோதனையில் குட்கா ஏதும் கிடைக்காத நிலையில் உங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி எதிரில் உள்ள வீட்டிற்கு கவியரசனை அழைத்துச்சென்றுள்ளனர். அப்போது அவரிடமிருந்த செல்போனைப் பறித்து வைத்துக் கொண்டு வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனர். வீட்டிலும் எதுவும் கிடைக்காததால் கவியரசனைக் காரில் ஏற்றி உட்காரவைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றபின் காரிலிருந்து இறக்கி விட்டுச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து சந்தேகம் அடைந்த கவியரசன் வீட்டில் பணம் வைத்திருந்த பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது பையிலிருந்த 5 பவுன் நகை மற்றும் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த கவியரசன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
செய்தியாளர் ஜெரால்ட்
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.