அண்ணா பல்கலைக்கழக அரங்கில் டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில், தங்களுக்கு பட்டம் வழங்குவற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான விதிமுறைகள் கூறுவது என்ன?
அண்ணா பல்கலைக்கழக அரங்கத்தில் கடந்த 26ம் தேதி நடைபெற்ற கவுரவு டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சிதான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடைபெற்ற இந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெவித்தது. இதுகுறித்து, மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் அளித்தனர்.
பட்டங்களை வழங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் தனது கையெழுத்து மோசடியாக பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் பட்டம் வழங்கப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான முறையான அனுமதி தங்களிடம் இருப்பதாகக் கூறி சில ஆவணங்களைக் காண்பித்தார்.
தான் சட்டவரைமுறைகளுக்கு உட்பட்டே பட்டங்களை வழங்கியதாக ஹரிஷ் கூறினாலும் அவர் மீது அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த புகாரின் பேரில் கோட்டூர் புரம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாடகை இடத்தை தவறாக பயன்படுத்தியது, நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துதல், நம்ப வைத்து ஏமாற்றுதல், போலியாக ஆவணத்தை உருவாக்கி மோசடி செய்தல், போலி முத்திரையை பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், டாக்ரேட் பட்டம் வழங்குவதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்த விதிமுறைகள் ஏற்கெனவே அரசால் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மத்திய மாநில அரசுகளின் கீழ் செயல்படும் பல்கலைக்கழங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மட்டுமே டாக்ட்டரேட் பட்டங்களை வழங்க தகுதி படைத்தவை. அரசு பல்கலைக்கழகங்கள் இத்தகைய கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கும்போது குறிப்பிட்ட நபரின் முழு விவரங்களை சேகரித்து ஆய்வு செய்து சிண்டிகேட் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.
பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகே கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் தாங்கள் விரும்பிய நபர்களுக்கு கவுரவ முனைவர் பட்டங்களை வழங்கி கௌரவிக்கின்றனர். இவ்வாறு வழங்கப்படும் பட்டங்கள் மட்டுமே செல்லத்தக்கதாக கருதப்படும். இவற்றை கடந்து வேறு தனியார் அமைப்போ அல்லது நிறுவனமோ கவுரவ டாக்ட்டரேட் பட்டங்களை வழங்க இயலாது.
அப்படி வேறு தனியார் அமைப்போ அல்லது நிறுவனமோ டாக்ட்டரேட் பட்டங்கள் வழங்குவது செல்லாது என்றும் கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் தங்களிடம் டாக்டர் பட்டம் வழங்குவதற்கான உரிய அனுமதி உள்ளது என ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் ஹரிஷ் தெரிவித்திருப்பதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Doctor, Governor, University