தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர் விபத்து தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு விசாரணை பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம், 27ம் தேதி, தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து, 11 பேர் பலியாயினர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர். ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா, ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்கினார்.
தொடர்ந்து, தேர் விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு, அப்பர் மடத்தில் காத்திருந்த காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பாரபட்சமற்ற விசாரணை
அதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியபோது, "களிமேடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு விசாரணை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் முழுமையாக நடத்தப்பட வேண்டும். இதில் கவனக்குறைவாக செயல்பட்ட அலுவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். அக்குடும்பங்களில் படிக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பெயில் மார்க்
திமுகவின் ஓராண்டுக் கால ஆட்சியில் 'பெயில் மார்க்' வாங்கியுள்ளது. 'பாஸ்மார்க்' வாங்கவில்லை.
அதிமுக, 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடத்தியது. அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களை இப்போதைய திமுக ஆட்சியில் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.
திமுக அரசு ஓராண்டு காலத்தில் தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றவில்லை. நீண்டகால, குறுகியகால சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.
திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மின் தடை இருக்கும்; மின் தட்டுப்பாடு இருக்கும் என்பது கடந்த கால வரலாறு. அதை இந்த ஆட்சியிலும் நிரூபித்துள்ளனர். மொத்தத்தில், இந்த ஆட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.