தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100 டிகிரி அளவுக்கு வெயில் ஒருபுறம், அனல்காற்று மறுபுறம் என மக்கள் தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தநிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல், கோவை ஆகிய 7 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோன்று வட கடலோர மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பகல் 12 மணி முதல் மாலை 4 மணிவரை திறந்தவெளியில் பயணிப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
2 கி.மீ வரை நடந்து இறுதி கட்டப் பிரச்சாரத்தை முடித்தார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தெற்கு மற்றும் தென்கிழக்கு திசை காற்றின் காரணமாக வருகிற புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாகவும், இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி அளவிற்கு இருக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்