பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பணம் தரப்படாத நிலையில், வீடு கட்டியதற்கு நன்றி தெரிவித்து கடிதம் வந்திருப்பது, கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்டோர், பிரதம மந்திரி நகர்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்ட விண்ணப்பித்தனர். இதற்கான விண்ணப்பம், சான்றிதழ் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்டவற்றை அந்த பகுதி அ.தி.மு.க கவுன்சிலராக இருந்த தமிழ்செல்வனிடம் ஓராண்டுக்கு முன்பே கொடுத்திருந்தனர். இந்தத் திட்டத்தின்கீழ் வீடு கட்ட ஒரு ரூபாய் கூட தரப்படாத நிலையில், திட்டத்தின்மூலம் வீடு கட்டியதற்கு நன்றி தெரிவித்து மத்திய அரசிடமிருந்து கடிதம் வந்துள்ளது..
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு மூன்றுத் தவணைகளாக ஒன்றரை லட்சமும், மாநில அரசு ஒரே தவணையாக 60ஆயிரமும் வழங்கும். ஆனால் ஒரு தவணை பணத்தைகூட கண்ணால் பார்க்காத கம்மியம்பேட்டை மக்களுக்கு, நன்றி கடிதம் வந்திருப்பது அவர்களை குழப்பமடைய வைத்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று, பிரதம மந்திரி திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளை காணவில்லை என புகார் மனுவே அளித்தனர். இதுகுறித்து விசாரிக்க நமது செய்தியாளர் அந்த பகுதிக்கு சென்றபோது, கம்மியம்பேட்டையில் 20 க்கும் மேற்பட்டோர் இப்படியான குற்றச்சாட்டை முன்வைத்தனர்.. மேலும், அம்மாவிற்கு வீடு தந்ததாக, மகள் வீடு முன் படம் எடுத்ததோடு, மகளிடம் கையெழுத்து பெற்றதாகவும் ஒரு பெண் குற்றம்சாட்டினார்.
இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தின் பிற பகுதிகளில் மட்டுமல்ல, தமிழகம் முழுக்கவே மோசடி நடந்திருக்கலாம் எனவும் மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக முன்னாள் கவுன்சிலர் தமிழ்செல்வனை தொடர்பு கொள்ள நமது செய்தியாளர் முயன்றார்.
ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனைத் தொடர்ந்து நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கம்மியம்பேட்டை பகுதிக்கு சென்று கடிதம் வந்துள்ள மக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் நாளை காலை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பபு கொடுத்து சென்றனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cuddalore