ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் நாம் தமிழர் சார்பில் நேற்று தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் சார்பில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மேனகாவுகவுக்கு ஆதரவாக சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஏன் தேர்தலில் தனித்து நிற்கிறீர்கள் என்று அனைவரும் தன்னிடம் கேட்பதாக கூறினார். ஆனால், மக்கள் எங்களை கைவிட மாட்டார்கள் வாக்கு செலுத்தி வெற்றி பெற வைப்பார்கள் என்று நம்பிக்கையில் தான் தொடர்ந்து தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்தார். மேலும், வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்று கூறினார்.
நாங்கள் தொடர்ந்து பிரசாரம் செய்வதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கின் விலை 25 ஆயிரம் ரூபாய் வரை ஏறும் என்று குறிப்பிட்ட சீமான், வந்த வரைக்கும் வசூலிங்க, நம்ம காசு நம்மிடம் இல்லாமல் அவர்களிடம் எப்படி போனது என்று சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், மக்கள் பிரச்னை, ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்திற்கும் தாங்கள் வந்து நிற்க வேண்டும், ஆனால் ஓட்டை மட்டும் பிரச்னை கொடுக்கும் அவர்களுக்கு போடுகிறீர்கள் என வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சீமான், ரொம்ப நாள கெஞ்சுகிறோம் விவசாயி சின்னத்துக்கு ஒரு முறை ஓட்டு போடுங்க என்றும், தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படும் எனவும் கூறி, ஆதரவு திரட்டினார்.
குஜராத் குறித்து ஆவணப்படம் வெளியிட்டதால் பிபிசி அலுவலகத்தில் ரெய்டு நடத்தி மிரட்டி பார்க்கிறார்கள், தானும் தான் தொடர்ந்து பேசி வருகிறேன் தனது வீட்டில் ஒரு ரெய்டு போடுங்க பார்க்கலாம் என்று சீமான் சவால் விடுத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Naam Tamilar katchi, Seeman