ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த நபர் காருடன் சாலையோரம் உள்ள உணவகத்திற்குள் புகும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதி முழுவதும் நேற்று முழு கடையடைப்பு நடைபெற்று வந்த நிலையில் மாலை 5 மணி அளவில் உணவகங்கள், தேனீர் கடைகள் திறக்கப்பட்டது. சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.பி.எஸ் கார்னரில் அசைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
நேற்று மாலை அதிவேகமாக வந்த கார் ஒன்று கடையின் முன்பு நின்றிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி, அங்கிருந்த நபரை இடித்து, பின்னர் அசைவ உணவகத்தின் முன்பு இருந்த அடுப்பின் மீது மோதி நின்றது. அடுப்பில் இருந்து நெருப்பு வந்ததால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உணவகத்தில் பணி புரிந்து வரும் ஊழியர்கள் சத்தியமங்கலம் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மதுபோதையில் காரை ஓட்டி வந்த ஸ்ரீகாந்த் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த நபர் மீது லேசாக மோதி அந்த நபர் மயிரிழையில் உயிர் தப்பும் காட்சி மற்றும் கார் கடைக்குள் புகும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.