அதிமுக சார்பில் ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த கடிதத்தை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை முக்கிய உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருக்கும் கடிதம் ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் விண்ணப்ப படிவம் அனுப்பப்பட்டது.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,665 பேரில் 2,501 பேர் தென்னரசுவிற்கு ஆதரவாக கடிதம் அளித்தனர். குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் படிவங்களை பெற்ற 128 பேரில் ஒருவர் கூட தென்னரசுவிற்கு ஆதரவாக படிவங்களை வழங்கவில்லை. அந்த கடிதம் அனைத்தையும், தேர்தல் ஆணையத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேரில் வழங்கினார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு 2,501 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். தென்னரசுக்கு சுமார் 93 சதவீத பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர் எனவும் எதிர்ப்பு வாக்கு எதுவும் பதிவாகாத நிலையில், 145 பேர் வாக்குகளை பதிவு செய்யவில்லை எனவும் கூறினார். வேட்பாளர் தேர்வு முடிவு 2,646 பேருக்கு சுற்றறிக்கை மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தொடர்பாக தமிழ்மகன் உசேன் அளித்த கடித்தத்தை ஏற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இடைத்தேர்தல் தொடர்பான சின்னத்திற்கான படிவத்தில் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட தேர்தல் ஆணையம் அதிகாரம் வழங்கியுள்ளது. ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளர் ஏற்கனவே வாபஸ் பெற்ற நிலையில், தற்போது இபிஎஸ் அறிவித்த வேட்பாளருக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.