ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து புகார் அளிப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை,
சென்னை கிண்டியில், உள்ள ஆளுநர் மாளிகையில், எதிர்கட்சித்தலைவர்
எடப்பாடி பழனிசாமி சந்தித்து மனு அளித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அதிமுகவிற்கும்
சசிகலாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சசிகலா பொதுச்செயலாளர் என கூறிவருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறினார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அவருடன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும், திமுக தில்லுமுல்லு செய்து ஜனநாயக படுகொலை செய்து வெற்றி பெற்றவர்களை தோல்வி அடைந்ததாக அறிவித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், மாவட்ட ஆட்சியர்களும் முறையாக பணி மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்ட அவர், தவறுகள் முறைகேடுகள் நடைப்பெற்றது குறித்து ஆளுநரிடம் முழுமையாக தெரிவித்ததாகவும் கூறினார்.
தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைப்பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை அதிமுக நாடியதாகவும், இந்த தேர்தல் இந்திய நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கும் தேர்தலாக நடைப்பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற யுக்திகளை கையாண்டு வெற்றி பெற செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
திருப்பத்தூரில் வாக்குப் பெட்டியை எடுத்து சென்ற சட்டமன்ற உறுப்பினர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்ட அவர், 2019ல் தேர்தலை நடத்த அதிமுக தயாராக இருந்ததாகவும், வார்டு மறுவரை பணிகள் குறித்து நீதிமன்றத்திற்கு சென்றது திமுக தான் எனவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், தூத்துக்குடி சம்பவத்தில் மக்களை பாதுக்காக்கும் காவலருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலை என்பதை பார்ப்பதோடு, தவறு செய்தவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டும் என்றே திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருவதாகவும், மடியில் கனம் இல்லை விழியில் பயம் இல்லை எனவும் கூறினார். 5 மாத கால ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மட்டுமே திமுக செய்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணம் கொடுத்து மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
அதிமுகவிற்கும் சசிகலாவிற்கு எந்த தொடர்பும் இல்லை என கூறிய அவர், சசிகலா பொதுச்செயலாளர் என கூறிவருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.
Must Read : ‘புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா?’ - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்!
அதிமுக ஆட்சியில் இருந்த போது மீனவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்ததாகவும், மீனவர்களுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.