தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது வினாக்கள் விடை நேரத்தில் நாகர்கோவில் சட்டமன்ற
பாஜக உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, ராஜாக்கமங்கலம் ஊராட்சி தெக்குறிச்சி கடற்கரையில் 400 மீட்டர் அளவுக்கு கடல் நீர் உட்புகுவதால், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறும் நிலை உள்ளதாகவும், இதனை தடுக்க கடற்கரையில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்ட அரசு முன் வருமா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், தடுப்பு சுவர் இல்லாததால் அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தென்னை மட்டைகள் தொழில் அழிக்கப்பட்டு விடுவதோடு, கிராமத்திற்குள்ளும் கடல் நீர் உட்புக வாய்ப்பு உண்டு என்றும், மத்திய அரசாங்கத்தினுடைய மீன் குஞ்சு ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது அந்த நிலையம் அடித்துச் செல்வதற்கான வாய்ப்பு உண்டு என்றும் எம்.ஆர்.காந்தி கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ராஜமங்கலம் ஊராட்சியில் தெக்குறிச்சி கடற்கரை பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் அரிப்பு தடுப்பு சுவர் பணிகள் மேற்கொள்ளும் வகையில் 400 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவர் அமைப்பதற்கு 3.5 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் 1,100 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது. அதுவும் கடலரிப்பால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதை சீரமைக்க 4.6 கோடி தேவைப்படுகிறது. எனவே 8 கோடி ரூபாய் இருந்தால் தான் இந்த பணிகள் மேற்கொள்ளலாம். எனவே கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து நிர்வாக அனுமதிக்காக அரசுக்கு அனுப்பப்படும்.
Must Read : விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு
மேலும், கடற்கரைப் பகுதிகளில் இந்த ஊர் மட்டுமில்லாமல், ஏற்கனவே பூந்துறை கோவளம், அரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைத்துள்ளோம் என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.