2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றும் நோக்கில் உழைக்க வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உட்கட்சி விவகாரம், நாடாளுமன்ற தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த முறை மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம் என்றும், இம்முறை 40 தொகுதிகளையும் கைப்பற்றும் நோக்கில் அதற்கான கட்டமைப்பை துவங்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
நன்கு பணியாற்றக்கூடிய பூத் ஏஜென்ட்களை தேர்வு செய்து நியமிக்க வேண்டும் எனவும், கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும், அதை தாம் பார்த்துக் கொள்வதாகவும் கூறியதாக தெரிகிறது. கட்சியில் புதிதாக அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஸ்டாலின், அணிகளுக்கென்று தன்னிச்சையாக அதிகாரம் வழங்கக்கூடிய வகையில் விதிகள் உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அரசினுடைய திட்டங்கள் சரியாக சென்றடைகிறதா என்பதை கண்காணியுங்கள் எனவும் மாவட்ட செயலாளர்களை ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். மேலும், க.அன்பழகன் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் சென்னை டிபிஐ வளாகத்தில் அவரின் திருவுருவச்சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்புக்கு இந்த கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அத்துடன், க.அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு, வருகின்ற டிசம்பர் 15-ம் தேதி திமுக சார்பில் மாநிலம் முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் கூட்டப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, MK Stalin, Tamil News