திமுக நிர்வாகிகள் எங்கள் மனதை புண்படுத்துகிறார்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை, கோயம்பேட்டில் உள்ள தனியார் உணவு விடுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்,கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தங்களின் கட்சிக்கு போதுமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்றும், இம்முறையும் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வழங்கபட்ட இடங்களை காட்டிலும் தங்களுக்கு மிக சொற்ப இடங்கள் கொடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
Also Read: தாயின் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. போக்சோ சட்டத்தில் இருவர் கைது
பட்டம்பாக்கம் பேரூராட்சி துணைத்தலைவர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி துணைத்தலைவர், விருதாச்சலம் அல்லது பண்ருட்டி நகராட்சித் துணைத் தலைவர், நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் மூன்றில் ஒரு பதவி வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார். ஆனால் இந்த இடங்களை திமுகவினர் கைப்பற்றி முதல்வரின் உத்தரவிற்கு பிறகும் பதவியை ராஜினாமா செய்யாமல் காலம் தாழ்த்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இன்றைக்கு மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவராக இருப்பதற்கு தங்களின் கட்சி சார்பாகவும் வாக்களித்து உள்ளோம் என்றும், முதல்வரை சந்தித்து அளித்த வேண்டுகோளுக்கு கூட இதுவரை எந்த ஒரு பதிலும் இல்லை.
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் முதல்வரின் உத்தரவுபடி பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தங்களின் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் ராஜினாமா செய்யாமல் இருப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியினரை திமுகவினர் மரியாதையாக நடத்தவில்லை என்றும், பல இடங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் எங்களது கட்சியினரை புண்படுத்தி மனதளவில் காயப்படுத்துவதாகவும், அதனையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.