கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என தி.மு.க வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி தனது தேர்தல் வாக்குறுதியில் உறுதி அளித்துள்ளார்.
கரூர் தொகுதியில் போட்டிடும் தி.மு.க வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி 100-க்கு 100 என்ற தலைப்பில் 100 திட்டங்கள் அடங்கிய வாக்குறுதி பட்டியலை இன்று கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கருர் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் 100 தேர்தல் வாக்குறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 5 ஆண்டுகளில் இந்த 100 திட்டங்களும் செய்து கொடுக்கப்படும். 100க்கு 100 என்ற தலைப்பில் ஒரு வாக்குறுதிக்கு ஒரு மார்க் என்று 100 வாக்குறுதிகளுக்கு 100 மார்க் மக்கள் அளிப்பார்கள். கண்டிப்பாக இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி மக்களிடம் 100க்கு 100 மதிப்பெண் பெறுவேன் என்றார். வெற்றி பெற்றவுடன் முதல் திட்டமாக கரூர் நகராட்சி பகுதிக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை காவிரி கூட்டு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வேன். தற்போது சீரான குடிநீர் விநியோகம் இல்லை. இதை முதல் பணியாக செய்து கொடுப்பேன்.
ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் திருப்பூருக்கு அடுத்து கரூர் முக்கியமான வர்த்தக நகரமாக இருந்து வருகிறது. கரூர் நகராட்சியை தரம் உயர்த்தி மாநகராட்சியாக கொண்டு வருவேன்.
தற்போதுள்ள அ.தி.மு.க ஆட்சியில் கரூரை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க மத்திய அரசிடம் குறைந்த பட்சம் பரிந்துரை கூட செய்யவில்லை. எனவே, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக் கூறி கரூரை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க நடவடிக்கை எடுப்பேன் என்றவர், தேர்தல் வாக்குறுதியில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பிற்கும் பயன் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது’ என்றார்.
வரும் 21 தேதி தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கரூர் மாவட்டத்தில் 9 இடங்களில் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார் என்றார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.