தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 6 நாள்களே உள்ளநிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மக்களைக் கவர்வதற்காக, வேட்பாளர்கள் வித்தியாச, வித்தியாசமாக வாக்கு சேகரித்துவருகின்றனர். பொதுமக்களின் துணிகளைத் துவைத்தும், தோசை, காபி போட்டுக்கொடுத்தும், துணியை அயர்ன் பண்ணிக்கொடுத்தும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். இதற்கிடையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்கள் மிகவும் உருகிப் பேசியும் வாக்கு கேட்கின்றனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதி மக்களிடம் வாக்கு சேகரிக்கும்போது, எனக்கு சுகர், பி.பி. உள்ளது. மக்கள் வாக்களிக்கவில்லையென்றால் உயிரைவிட வேண்டிய சூழல் வரும் என்பது போல உருக்கமாக பேசினார். அதேபோல, அதே தொகுதி தி.மு.க வேட்பாளரும் உயிரை விடுவேன் என்பது போல பேசினார். இந்தநிலையில், கடலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஐயப்பன் மக்களை மிரட்டும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஐயப்பன், ‘கடலூர் மக்களுக்கு கேரள மந்திரவாதிகள் மூலமாக சூனியம் வைத்துள்ளதாகவும், திமுகவுக்கு ஓட்டுபோடாதவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் என்றும் பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருப்பப்பட்டு யார் பணம் கொடுத்தாலும் வாங்கி கொள்ளுங்கள் என்றும் ஆனால் உதயசூரியனுக்கு வாக்களித்துவிட்டு அதனை செலவு செய்யுங்கள் எனவும் திமுக வேட்பாளர் ஐயப்பன் வாக்கு சேகரிப்பின் போது பேசினார்.