திருநெல்வேலி மாவட்டத்தின் திமுக கிழக்குமாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ள செல்லத்துரை, அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான செல்லத்துரை. அதே ஊரிலேயே சொந்தமாக கோழிப்பண்ணை வைத்து மொத்தவிற்பனையும் செய்துவந்தார். செல்லத்துரை திமுக நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தான் வியாழக்கிழமை மாலை தனது வீட்டில் இருந்து இருசக்கரவாகனத்தில் தனது கோழிப்பண்ணைக்கு சென்றுள்ளார் .
அப்போது திடீரென அவரை வழிமறித்த கும்பல், செல்லத்துரையை அரிவாளால் சரமாரியாக வெட்டிசாய்து தப்பியோடியுள்ளது. இதில் படுகாயமடைந்த செல்லத்துரை ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முக்கூடல் அரசு மருததுவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே செல்லதுரை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த முக்கூடல் போலீசார் உடற்கூராய்விற்காக சடலத்தை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் செல்லதுரைக்கும் அவரது சித்தி மகனான ஐயப்பனுக்கும் சொத்து தகராறு இருந்ததாக சொல்லப்படுகின்றது.
அதன்காரணமாக ஐயப்பன் தான் ஆட்களைவைத்து கொலையை அரங்கேற்றியிருக்க வேண்டும் என்று உறவினர்கள் போலீசாரிடம் சந்தேகத்தை தெரிவித்துள்ளனர். ஐயப்பன் தலைமறைவாக உள்ளநிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். திமுக பிரமுகர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் அப்பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.