தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட, ஆப்ரிக்கா காடுகளில் உள்ள 5 மலைப்பாம்பு குட்டிகள் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பாம்பு குட்டிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்பினா். திண்டுக்கல்லை சோ்ந்த கடத்தல் பயணி, அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது திண்டுக்கல்லைச் சேர்ந்த விவேக் (வயது -28) என்ற பயணி பெரிய பிளாஸ்டிக் கூடை எடுத்து வந்தாா்.அவர் வழக்கத்துக்கு மாறாக மிகுந்த பதட்டத்துடனும், பரபரப்புடன் காணப்பட்டார்.
இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடையை அதிகாரிகள் திறந்து பாா்த்து, அதிர்ச்சி அடைந்தனா். அந்தக்கூடையில் வெளிநாட்டை சேர்ந்த 5 மலைப்பாம்பு குட்டிகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.
Also Read : கோவை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
இதனையடுத்து விவேக்கை வெளியில் விடாமல் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னையில் உள்ள மத்திய வனகாப்பக குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அந்த அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து, இந்த மலைப்பாம்பு குட்டிகளை ஆய்வு செய்தனர். இவைகள் அனைத்தும் ஆப்பிரிக்க நாட்டு காடுகளில் வசிக்க கூடியவைகள். இந்த விலங்குகளுக்கு இந்தியாவில் அனுமதி கிடையாது. மேலும் இந்த மலைப்பாம்பு குட்டிகளால், வெளிநாட்டு நோய் கிருமிகள் இந்தியாவிற்கு பரவி விடும். எனவே இதை வந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி விட வேண்டும். அதற்கான செலவை பாம்பு குட்டிகளை கொண்டு வந்த விவேக்கிடமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
அதன்படி சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விவேக்கை கைது செய்தனர். பாம்பு குட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் மறுநாள் அதே தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த 5 மலை பாம்பு குட்டிகளையும் மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்பினா். அதற்கான செலவு விவேக்கிடம் வசூலிக்கப்பட்டது. விவேக்கிடம் மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை எதற்காக எடுத்து வந்தார்? இதைக் கொண்டு வர சொன்னது யார்? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.
செய்தியாளர் : சுரேஷ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.