பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது. தேரில் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி கிரிவீதி உலா எழுந்தருளினார்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படையான பழனி அடிவாரம் திருஆவினன்குடி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச்.12 ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் தென் மாவட்டங்களான கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான முருகபக்தர்கள் விரதமிருந்து, கொடுமுடி தீர்த்தம் தரித்து பழனிக்கு பாதயாத்திரை வந்து மலைக்கோயிலில் மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு தீர்த்தம் நேர்ச்சை செலுத்தி வந்தனர்.
Also Read: திருச்சுழி திருமேனி நாதர் ஆலயத்தில் பங்குனி மஹா தேரோட்டம்..
விழா நாட்களில் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமி வெள்ளிக்காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளியானை போன்ற வாகனங்களில் சன்னதி வீதி, கிரிவீதி உலா எழுந்தருளினார். நேற்று மாலை திருஆவினன்குடி கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாணத்தை தொடர்ந்து தம்பதி சமேதராக அருள்மிகு முத்துக்குமாரசாமி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித் தேரில் ஏற்றம் செய்யப்பட்டார். பின்னர் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க வெள்ளித் தேர் நான்கு கிரிவீதிகளில் ஆடி அசைந்து உலா வந்தது. தேரின் பின்னே ஓதுவார்கள் திருமுறை பாடல்களை இசைத்தபடி சென்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) பங்குனி உத்திரத் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனி செய்தியாளர்: அங்குபாபு நடராஜன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car Festival, Murugan temple, Palani