திண்டுக்கல்லில் பைனான்ஸ் அதிபர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் ஆர்.எம் காலனி பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சிக்க முத்து. இவரது மகன் பிரபாகரன் (43). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.இவரது மனைவி சுமதி இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரபாகரனின் மனைவி சுமதி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.ஆர்.எம் காலனி பகுதியில் உள்ள வீட்டில் பிரபாகரன் மட்டும் தனியே இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த பிரபாகரன் வீட்டை விட்டு வெளியேவரவில்லை. இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனைத் தொடர்ந்து அருகில் இருப்பவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவு தாழ்ப்பாள் எதுவும் போடாமல் திறந்திருந்ததையடுத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது படுக்கையறையில் உடல் அழுகிய நிலையில் பிரபாகரன் பிணமாக கிடந்துள்ளார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மேற்கு போலீசார், கதவு மூடப்படாமல் இருந்த காரணத்தினால் பிரபாகரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் அவரை கொலை செய்து வீட்டில் படுக்கை அறையில் போட்டு சென்றுள்ளனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.