வாரிசுகளால் புறக்கணிக்கப்படுவதாக 80 வயது மூதாட்டி ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 27 வாரிசுகள் இருந்தும் அனாதையான அந்த மூதாட்டியின் பரிதாப நிலை குறித்து விரிவாக பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பாயி. இவருக்கு வயது 80. இவரது கணவர் துரைராஜ் சில ஆண்டுகளுக்கு முன் வாகன விபத்தில் பலியானார். இவருக்கு ஒரு மகனும் 5 மகள்களும், அவர்கள் வழியாக 21 பேரக்குழந்தைகளும் என மொத்தமாக 27 வாரிசுகள் உள்ளனர்.
இப்பகுதியில் கருப்பாயிக்கு சொந்தமாக வீடும், விவசாய நிலங்களும் உள்ளது. சில மாதங்களாகவே உணவு வழங்காமல் கருப்பாயியை அவரின் வாரிசுகள், உறவினர்கள் புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நத்தம் பகுதியில் செயல்படும் பசியில்லா நத்தம் அறக்கட்டளையை சேர்ந்த நபர்களிடம் மூதாட்டி நிலை குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்று பசியில்லா நத்தம் அறக்கட்டளையை சேர்ந்த நபர்கள் அந்த பாட்டிக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளனர்.

மூதாட்டி கருப்பாயி
இந்நிலையில் மூதாட்டி கருப்பாயி நத்தம் காவல் நிலையத்தில் வயதாகிவிட்ட நிலையில் தன்னை கவனித்துக் கொள்ளாமல் உணவு கொடுக்காமலும் புறக்கணிப்பதாக மகன் விஜயன், மகள்கள் மீனா, முத்துலட்சுமி, பஞ்சவர்ணம், போதும்பொண்ணு, மல்லிகா ஆகியோர் மீது புகார் அளித்தார். மகன், மகள்கள்,பேரன்,பேத்திகள் உட்பட 27 க்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்தும் உணவு அளிக்காமல் புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சர்வதேச முதியோர் தினமான நேற்று தனது உறவினர்களால் புறக்கணிக்கப்படுவதாக மூதாட்டி கருப்பாயி காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வசந்த சித்தார்த்தன் - செய்தியாளர், நத்தம் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.