திண்டுக்கல்-சாணார்பட்டியில் வாகன சோதனையின் போது பிடிபட்ட வாகனத்தை விடுவிக்க லஞ்சம் கேட்ட சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தமிழகத்தில்
கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் விதமாக மே 31ம் தேதிவரை கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிவோரின் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, போலீசார் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிபவர் வாசு. கொரோனா கட்டுப்பாடுகளை மீறி யாராவது வாகனங்களில் சுற்றித் திரிகிறார்களா என்பதை கண்காணிக்க வாசு வாகன
தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாணார்பட்டி வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை அவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
வழக்கு பதியாமல் விடுவிக்க, வாகனத்தை ஓட்டிவந்த நத்தம் கல்வேலிபட்டியைச் சேர்ந்த பாலமுருகனிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் தருமாறு வாசு கூறியுள்ளார். அருகில் உள்ள மருந்து கடையில் லஞ்ச பணத்தை கொடுத்து அங்கு உள்ளவரை பெற்றுக் கொண்டதாக அலைபேசியில் அழைத்துச் சொல்லச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
அதேபோல் செய்த பாலமுருகன், எஸ்.ஐ மற்றும் மருந்து கடைக்காரர் பேசியதை தனது செல்போனில் ஆடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனை பலரும் பகிரத் தொடங்கினர். இதனிடையே, இந்த தகவல் டி.ஐ.ஜி. முத்துச்சாமி கவனத்திற்கு செல்ல விசாரனை நடத்த உத்தரவிட்டார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட எஸ்.பி., ரவளி பிரியா, விசாரணை அறிக்கையை பரிந்துரை செய்துள்ளார். இதனை அடுத்து, எஸ். ஐ. வாசுவை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி முத்துச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது சம்பவம் போலீசார் மத்தியில் கலக்கத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.