பழனி அருகே ஆற்றில் மர்மமான முறையில் குழந்தை இறந்து கிடந்த சம்பவத்தில் குழந்தையின் தாயாரே குழந்தையை வீசியது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து தாயாரை பழனி தாலுகா போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ராசாபுரத்தை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவர் தனியார் நூற்பாலையில் டெய்லராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா. இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளன. இரண்டாவது குழந்தை ராகுல் பிறந்து நான்கு மாதமே ஆகிறது. கடந்த சில மாதங்களாக தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை குழந்தை ராகுலை வீட்டில் படுக்க வைத்து விட்டு இயற்கை உபாதைக்காக லதா வெளியே சென்று விட்டு வந்த பார்த்த போது குழந்தை காணாமல் போயிருந்தது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு குழந்தையை தேடியபோது அருகே இருந்த பாலாறு ஆற்றில் குழந்தை அமலை செடிகளுக்கு மத்தியில் சடலமாக மீட்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
குழந்தை இறந்த நேரம் மற்றும் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தாய் லதாவிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அவருக்கு குழந்தை பிறந்தது முதலே மனக்கஷ்டம், உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், ஜாதகத்தில் குழந்தையின் நேரம் சரியில்லை என்றும் தெரியவந்ததால் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டதாக ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனடிப்படையில் பழனி தாலுகா காவல் துறையினர் தாய் லதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: அங்குபாபு நடராஜன் ( பழனி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.