தருமபுரியில் உள்ள அய்யனார் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம்... நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை...
தருமபுரியில் உள்ள அய்யனார் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம்... நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை...
ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
தருமபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள அய்யனார் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் ஏரி மாசடைந்து உள்ளது. இதுகுறித்து கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதியிலுள்ள பொதுமக்களும் மீன்பிடி தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து தர்மபுரி செல்லும் சாலையின் வலதுபுறத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அய்யனார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி கடத்தூர் பேரூராட்சி பகுதிக்கு நிலத்தடி நீர் கிடைக்கும் ஆதாரமாக இருந்து வருகிறது. கடத்தூர்பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வரும் இந்த ஏரியில் வருடம்தோறும் மீன் பிடிப்பதற்கு ஏலம் விடப்பட்டு அதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
இந்த வருடம் கொரோனா ஊரடங்கு என்பதால் ஏரியை ஏலம் விடாத நிலையில் ஊர் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மீன்களை தூண்டில் மூலமாகவும் வலைகள் மூலமாகவும் பிடித்து விற்பனை செய்தும், உணவாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஏரியில் மீன் பிடிப்பதில் தூண்டில் மூலம் மீன் படிப்பவர்களுக்கும் வலை விரித்து மீன் பிடிப்பவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இரு பிரிவினருக்கும் இடையே மீன் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலால் ஒரு பிரிவினர் ஏரியில் ரசாயனம் அல்லது விஷம் கலந்து இருக்கலாம் என புகார் எழுந்துள்ளது.இதனால் ஏரியில் தண்ணீர் நிறம் மாறி இயற்கையாகவே ஏரியில் வளர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீன்கள் பாதிப்படைந்து மீன்கள் செத்து மிதந்து வருவதாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கடத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்கை நடந்து கொள்வதாகவும் இப்பகுதி பொதுமக்களும் மீன் பிடிப்பவர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளார்: ஆர்.சுகுமாா், தருமபுரி
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.