ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பள்ளிப்படிப்பை மாணவர்கள் தொடர ஒன்றிணைந்த இளைஞர்கள்...
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பள்ளிப்படிப்பை மாணவர்கள் தொடர ஒன்றிணைந்த இளைஞர்கள்...
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் பல நாட்களாக மூடிக்கிடக்கும் நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் படிப்பு பாதியிலேயே நிற்பதை தடுப்பதற்காக கிராமத்து வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் கரம் கோர்த்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே அமைந்துள்ளது போளையம்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் பட்டியலின சமுதாய மக்களும், பொருளாதாரத்தில் நலிவடைந்தோரும் அதிகளவில் வசிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க வசதி இல்லாத அந்த மக்கள், அரசு பள்ளியை மட்டுமே சார்ந்துள்ளனர். இதனிடையே கொரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் போளையம்பள்ளியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பணிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்கள் தவறான வழிக்கு செல்வதும், குழந்தை திருமணம் போன்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தடுத்து மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக போளையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கார்த்திக் என்பவர் சில வேலையில்லா பட்டதாரிகளுடன் இணைந்து தமிழர் பண்பாட்டு மையம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளார். இதன்மூலம் சாஹிப் பயிற்சி மையம் என்று தொடங்கி கிராமப்புற மாணவர்களுக்கு 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இலவசமாக பாடம் நடத்துகின்றனர்.
போளையம்பள்ளியில் 30 மாணவர்களுடன் இலவச பயிற்சி மையம் தொடங்கியது. அதனை தொடர்ந்து நவலை. சிந்தல்பட்டி, வகுத்தப்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலுக்கும், மலை கிராமங்களுக்கும் நேரிலேயே சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்றனர்.
நேரடி வகுப்புகள் மட்டுமின்றி வாட்ஸ்ஆப் மூலமாகவும் பல்வேறு மாணவர்களுக்கு வகுப்புகள் நடததப்படுகிறது. திறனாய்வு தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கும் வாட்ஸ்ஆப் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக சேவையாற்றும் கிராமத்து வேலையில்லா பட்டதாரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.