சிதம்பரத்தில் அரசுப்பள்ளி ஒன்றில், மாணவர்கள் சிலரை ஆசிரியர் தலைமுடியை பிடித்து பிரம்பால் சரமாரியாக அடித்தும், எட்டி உதைத்தும் தாக்கும் பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை மதியம் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலரை அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் பிரம்பால் அடித்து உதைத்துள்ளார்.
தனது வகுப்பை புறக்கணித்த 6 மாணவர்களை கண்டித்து ஆத்திரத்தில் கையில் வைத்திருந்த பிரம்பால் அடித்தும் காலால் எட்டி உதைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த காட்சியை சக மாணவர்கள் தங்களது மொபைலில் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
சிதம்பரம் பூளாமேடுவைச் சேர்ந்த சஞ்சய் என்ற மாணவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இரண்டு மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களை ஆசிரியர் பிரம்பால் அடித்தும், காலால் உதைத்தும் தாக்கும் காட்சிகள் பெற்றோர் மனதிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆசிரியர் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் மாணவர்களைக் கடுமையாகத் தாக்கிய ஆசிரியர் சுப்ரமணியத்தைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதே நேரம் அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்காமல் தங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்பை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதே பெற்றோரின் வேண்டுகோளாகவும் உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.