தஞ்சை மாவட்டத்தில், 8 இளம் பெண்களை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் திருமணம் செய்து, தனித்தனியாக குடித்தனம் நடத்தி வந்த 23 வயது இளைஞர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூரைச் சேர்ந்தவர் சந்தோஷ். திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்த இவர் 5 மாதங்களுக்கு முன்பு, கருவிழிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது சத்யா என்ற இளம்பெண்ணைத் திருமணம் செய்தார். மனைவியுடன் திருப்பூர் சென்ற அவர் அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தினார்.
கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேலைக்கு சென்ற சந்தோஷ் வீட்டுக்கு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த சத்யா, சந்தோஷைத் தேடிப் பார்த்துக் கிடைக்காத நிலையில் காணாமல்போன கணவரை மீட்டுத் தர வேண்டும் என திருப்பூர் போலீசாரிடம் புகாரளித்தார். கணவர் சந்தோஷின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போலீசார், அவர் சொந்த ஊரான கீழையூரில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
மனைவி சத்யாவுடன், போலீசார் அங்கு சென்று பார்த்த போது, 19 வயதான சசிகலா என்ற இளம்பெண்ணுடன் சந்தோஷ் குடித்தனம் நடத்திக் கொண்டிருப்பது அம்பலமானது. போலீசார் போயிருந்த போது சந்தோஷ் வீட்டில் இல்லை. அதனால், சசிகலாவை சந்தோஷிடம் செல்போன் மூலம் நைசாக பேசி வீட்டுக்கு வரவழைத்து சுற்றிவளைத்த போலீசார் அவரை பட்டுக்கோட்டை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போதுதான், அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. சசிகலாவைப்போல், மொத்தம் 8 இளம்பெண்களை ஏமாற்றி சந்தோஷ் தனித்தனியே திருமணம் செய்து குடித்தனமும் நடத்தி வந்தது தெரியவந்தது. ஆனால், 8 பெண்களை திருமணம் செய்த சந்தோஷ், திருமணம் செய்த இளம்பெண்களுக்கு தனது பிற திருமண நாடகத்தைச் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தர்.
பலரை ஏமாற்றிய திருமண மன்னன் சந்தோஷைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் இளம்பெண்களை ஏமாற்றியது குறித்து விசாரித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.