முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர்கள் (கோப்புப்படம்)

புலம்பெயர் தொழிலாளர்கள் (கோப்புப்படம்)

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தவும், அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

  • Last Updated :

தமிழகத்தில் சிக்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் சிக்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்லும் முன்பு, அவர்கள் தங்கும் சமூகநலக் கூடத்தின் விவரங்கள் அறிவிக்கவேண்டும் எனவும் வெளியூர் செல்வதற்கான ரயில் விவரங்களை இணையதளத்தில் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளிலும் வெளியிடவேண்டும் எனவும் கோரி, சென்னை கொளத்துரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி திலக்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சொந்த ஊர்களுக்குச் செல்ல பதிவு செய்துள்ள சுமார் 2 லட்சத்து 43 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்களில், ஒரு லட்சத்து 799 தொழிலாளர்கள் தமிழக அரசின் செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், அதற்கு சில மாநிலங்கள் அனுமதிக்க மறுப்பதாகவும் கூறினார். அத்தோடு, தமிழக அரசு கேட்டுக் கொண்டால் சிறப்பு ரயில்கள் இயக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் நிலையங்களை நோக்கி வெளிமாநிலத் தொழிலாளர்கள் சாலைகளில், முகக்கவசம், சமூக விலகலைப் பின்பற்றாமல் செல்வதாகக் குறிப்பிட்டனர். வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தவும், அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் திட்டம் குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மே 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: Judgement, Lockdown