முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் தொடர்புடையவர்களின் நிறுவனங்களின் 110 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடுகளை முடக்கி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. அமைச்சராக இருந்தபோது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அரசு டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும், சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடுகள் தொடர்பான வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில், முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் தொடர்புடையவர்களின் நிறுவனங்களான கே.சி.பி. இன்ப்ரா மற்றும் ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட் நிறுவனங்களின் 110 கோடி ரூபாய் மதிப்பிலான நிரந்தர வைப்பீடுகளை முடக்க கோரி, சிறப்பு நீதிமன்றத்த லஞ்ச ஒழிப்பு துறை மனுத்தாக்கல் செய்தது.
இதையும் படிங்க: அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் சொப்பன சுந்தரி, வாயாசாமி பாடல்களுக்கு குத்தாட்டம் போட்ட நடனக்கலைஞர்கள்
2017ம் ஆண்டுக்கு பின் துவங்கப்பட்ட இந்த நிரந்தர வைப்பீடுகள், மாநகராட்சி டெண்டர்களுக்காக வழங்கப்பட்ட பணம் என சந்தேகிப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.ஓம்பிரகாஷ், வங்கி நிரந்தர வைப்பீடுகளை முடக்க உத்தரவிட்டதுடன், லஞ்ச ஒழிப்பு துறை மனுவுக்கு பதிலளிக்கும்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.