தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுணக்கமாக இருக்கக் கூடாது என சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, பெருங்குடி, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களிலும் சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு மெல்ல சீராக அதிகரித்து வருகிறது.
கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று ஏற்படுவது மட்டுமல்லாமல் ஆங்காங்கே நிகழ்வுகளில் பங்கேற்று குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று பரவுகிறது. இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றாலும் இந்த நிலையில் தொடர்ந்தால், இணை நோய்கள் உள்ளவர்களும் முதியவர்களும் பாதிக்கப்பட்டால், நிலைமை இதே போன்று இருக்காது.
இந்த அதிகரிப்பு என்பது சமூகத்தில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்பதற்கான மறைமுக குறியீடாகும். தமிழ்நாட்டில் 93.74% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 82.55% பேர் இரண்டாவது தவணை செலுத்தியுள்ளனர். எனினும் 43 லட்சம் பேர் இன்னும் ஒரு டோஸ் கூட செலுத்தவில்லை.
இதையும் படிங்க: மதுரை- தேனி ரயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பின் தொடங்கியது.. குதூகலமாய் பயணித்த மக்கள்
1.22 கோடி பேர் இரண்டாவது தவணையை தவறவிட்டுள்ளனர். 13 லட்சம் பேர் பூஸ்டர் செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள். இவர்கள் தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்க வேண்டும். நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் கூட்டங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தடுக்க வேண்டும்.சுகாதார மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அனைவரது ஒத்துழைப்பும் தேவை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.