கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்பட்டது தொடர்பாக பல்வேறு முறைகேடு சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், 5 சவரன் மட்டுமல்லாது வங்கிகளில் பெறப்பட்ட 100% பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைகளை வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து கடன் தள்ளுபடி தொடர்பாக பணிகளில் கூட்டுறவு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் நகைக் கடன் பெற்றதில் பல்வேறு முறைகேடு சம்பவங்கள் நடைபெற்றதும் தற்போது தெரியவந்துள்ளது. நாமக்கல் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த விவகாரத்தில் 10 ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடு தொடர்பாக தினந்தோறும் தகவல்கள் வெளியாகிவரும் சூழலில் இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நகைக்கடன் வழங்கப்பட்டதில் பல கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.
இதையும் படிங்க: தீதும் நன்றும் பிறர் தர வாரா... திமுக என்றும் பயன் தர வாரா.. அதிமுக நாளேடு கடும் விமர்சனம்
5 சவரன் வரையிலான நகைக்கடன் மட்டுமின்றி கூட்டுறவு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அனைத்து பொது நகைக் கடன்களையும் 100 சதவீதம் ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. எனவே கூட்டுறவு நிறுவனங்களில் 31.03.2021 அன்று நிலுவையில் இருந்த நகை கடன்களையும் 1.04.2021 முதல் ஆய்வு நாள் வரை நிலுவையில் உள்ள பொது நகைக் கடன்களையும் 100 சதவீதம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அருந்திய மதுவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்: டாஸ்மாக் பாரை சூறையாடிய மதுபிரியர்கள்!
இதற்காக கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தமிழ்நாடு முழுவதும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் பெறப்பட்ட நகைகடன்களை 100 சதவீதம் ஆய்வு செய்யும். சென்னை மண்டலத்தில் துணைப்பதிவாளர்களை கொண்ட குழு அமைத்து நகைக்கடன்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.