மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்கப்படவில்லை எனக்கூறி மத்திய - மாநில சுகாதார துறை செயலாளர்கள் உள்பட 9 பேருக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், தமிழக அரசு சட்டப்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என அதிமுக, திமுக, திராவிடர் கழகம் மதிமுக கம்யூனியிஸ்ட் கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளும், மருத்துவ கவுன்சில் அதிகாரிகளும் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
மத்திய பொது சுகாதார பணிகள் இயக்குனர், மத்திய சுகாதாரத்துறை, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் செயலாளர்கள் குழுவை அமைத்து இறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த உத்தரவின் அடிப்படையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எத்தனை சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடாக வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு மூன்று மாதங்களில் (27.10.2020) அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது
தற்போது, தமிழக சுகாதார துறை செயலாளர் மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குனரை சேர்க்காமல் மத்திய மாநில அரசுகள் குழு அமைத்துள்ளது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என கூறி தி. மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
Also read... டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி - பதில் தராவிட்டால் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை என எச்சரிக்கை!
அதில்,கடந்த செப்டம்பர் மாதம் மத்திய சுகாதாரத்துறை செயலர் அமைத்த குழுவில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக சுகாதாரத்துறை செயலர் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குனர் ஆகியோரை சேர்க்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை பதில் அளிக்காததால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Madras High court, OBC Reservation