நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, உணவுப்பொருள்கள் மீதான ஜிஎஸ்டி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி முதல்நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றும் மக்களவை சபாநாயகரை சூழ்ந்து கொண்டு உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை குறித்து முழக்கங்களை எழுப்பி காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். விலைஉயர்வு குறித்த பதாகைகளையும் கையில் ஏந்தி இருந்தனர். அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிகளை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் ஓம்.பிர்லா கூறினார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அவர் எச்சரிக்கை விடுத்தும் அமளி நிற்கவில்லை.
இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, மாணிக் தாகூர், ரம்யா ஹாரீஸ் மற்றும் டி.என்.பிரதாபன் உள்ளிட்ட 4 எம்.பிக்களை மழைகால கூட்டத்தொடர் முடியும் வரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, “ஆங்கிலேயர்களை விட கொடுமையான ஆட்சி நடந்து வருகிறது. நான் கிராமத்தில் இருந்து வந்த சாதாரண பெண். இதனால் எங்கள் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு வாங்கி கொடுக்கிற பால் பொருள்களுக்கு எல்லாம் வரிப்போட்டால். ஒரு ஏழைத்தாய் எப்படி குழந்தைக்கு பால் வாங்கி கொடுக்க முடியும். இந்த இடைநீக்கத்துக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். மக்களை பாதிக்கின்ற விலைவாசி உயர்வை எதிர்த்து நாங்கள் போராடுவோம். போராடிக்கொண்டேதான் இருப்போம். ” எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.