கோவை அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ பாடப்பிரிவின் துறை தலைவர் பேராசிரியர் ரகுநாதன் மீது மாணவிகள் பந்தய சாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரினை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ பாடப்பிரிவின் துறைத் தலைவராக இருப்பவர் பேராசிரியர் ரகுநாதன். இவர் கல்லூரியில் தனது துறையில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பேராசிரியர் ரகுநாதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை குழு அமைத்து அரசு கலைக்கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. பந்தய சாலை காவல்துறையினரும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் இன்று பிற்பகல் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் பேராசிரியர் ரகுநாதனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணவிகள் உரிய ஆதாரங்களையும் இணைத்து அளித்த புகாரைத் தொடர்ந்து பேராசிரியர் ரகுநாதன் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடத்தல், பெண்ணை மானபங்கம் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் பேராசிரியர் ரகுநாதனை பந்தய சாலை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று இரவே நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.