கோவையில் அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் மதவெறியை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி தந்தை பெரியார் திரவிடர் கழகத்தினர் முதன்மை கல்வி அலுவலரிடம் இன்று மனு அளித்தனர்.
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல்வேறு அமைப்பைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற நபரை இந்து முன்னணியினர் தாக்கினர்.
இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம் உட்பட பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதாவிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் மதவெறியைத் தூண்டும், பிரிவினையை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது எனவும் வலியுறுத்தினர்.
இதனிடையே நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடைபெறும் தனியார் பள்ளி முன் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பள்ளியின் முன்பு இருந்த கடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியனரை போலீசார் கைது செய்தனர். இதனால் விளாங்குறிச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, RSS