கோவை சுந்தராபுரம் அருகே திருமணமாகி சில மாதங்களே ஆன கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னையில் கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நாகர்ஜுனன்(30) மற்றும் இந்திரா நகரைச் சேர்ந்த ஷர்மிளா(27) ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளாததால் இவர்கள் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொள்கின்றனர். பின்னர் நண்பர்களின் உதவியுடன் இத்தம்பதியினர் காந்தி நகரில் உள்ள மூன்றாவது வீதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நாகர்ஜுனனின் மனைவிக்கும் அவரது நண்பர் கார்த்திக்கிற்கும் தொடர்பு இருப்பதாக நாகர்ஜுனன் சந்தேகம் அடைந்தார். இதுதொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் நாகர்ஜுனன் மற்றும் அவரது மனைவி ஷர்மிளாவிற்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த கணவர் நாகர்ஜுனன் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.பின்னர் வீட்டின் கதவை சாத்திவிட்டு வெளியேறியுள்ளார். தொடர்ந்து மது குடிக்க நண்பர்களுடன் சென்ற நாகர்ஜுனன் மதுபோதையில் தனது வேறொரு நண்பர்களிடம் மனைவியை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதைதொடர்ந்து வீட்டிற்கு சென்று பார்த்த நண்பர்கள் நாகர்ஜுனனின் மனைவி ஷர்மிளா உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போத்தனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வந்த போத்தனூர் போலீசார் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தில் நாகர்ஜுனனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : ஜெரால்ட் ( கோவை)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.