முதல்வரின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலாவாக தான் பார்க்கப்படுகிறது என
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்
எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணத்தில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதாக தகவல் வருகிறது. துறைசார்ந்த அமைச்சர்கள் அதிகாரிகள் சென்றிருந்தால் அது சரி. ஆனால் முதல்வரின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலாவாக தான் பார்க்கப்படுகிறது.
துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்கவா? அல்லது குடும்ப சுற்றுலா பயணமா? என்றுதான் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். சர்வதேச வர்த்தக கண்காட்சி முடியும் தருவாயில் தமிழ்நாட்டின் சார்பில் அரங்கம் அமைத்து துவக்கி வைப்பது வேடிக்கையாக உள்ளது.
நான் வெளிநாடு சென்ற போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் விமர்சனம் செய்தார். நான் வெளிநாடு சென்றபோது, துறை சார்ந்த அமைச்சர்கள் அதிகாரிகளே உடன் வந்தனர். வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதோடு மட்டுமின்றி வளர்ச்சித்திட்டங்களை கொண்டு வந்தோம். அப்போது ஸ்டாலின் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்தார்.
தமிழகத்தில் ரூ.2,600 கோடி முதலீடு செய்ய அமீரக நிறுவனங்கள் ஒப்பந்தம்!
சர்தேச கண்காட்சியிலும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்தான் இடம்பெற்றுள்ளன. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது.
சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்து தனிப்பட்டது. அரசியல் என்பது வேறு தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை; அரசியல், பொதுப்பிரச்னையில்தான் வேறுபாடு உள்ளது.
ஸ்டாலினுக்கும் எங்களுக்குமே தனிப்பட்ட முறையில் எந்த பிரச்னையும் கிடையாது; அரசியல் ரீதியாகதான் எதிர்கருத்துகளை கூறுகிறோம்.
எட்டுவழிச்சாலை விவாகரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. எட்டுவழிச்சாலைக்கு எக்ஸ்பிரஸ் வே என்று பெயர்மாற்றம் செய்து நிறைவேற்றும் முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.