போதை பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க ஒத்துழைப்பு தேவை என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
போதைப் பொருட்களின் பயன்பாட்டை அழிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்குபெறும் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் வரும் 10-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், இதுதொடர்பாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், சமூகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, உறுதியேற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தற்செயலாகவோ, தவறுதலாகவோ போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி, அதனுள் மூழ்கிவிடுவதாகக் கூறியுள்ளார்.
போதைப்பொருட்கள் அவர்களது வளர்ச்சியை தடுப்பதோடு, அவர்களது குடும்பத்தையும் அழித்துவிடுவதாகவும், இது நாட்டின் எதிர்காலத்தை கடுமையாக பாதிப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார். எனவே, சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களை முற்றிலும் அழித்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்,
போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ம் நாளை போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறினார். மேலும் அன்றைய தினம் தங்களது தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து, இது அரசியல் பிரச்னை அல்ல; நாட்டின் எதிர்காலம் குறித்த பிரச்னை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.