தோள்சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 200 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் எத்தகைய இழிநிலை இருந்தது என்பதை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்துவதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் அவசியம் என்றார்.
இதையும் படிங்க; “ஒரு உலகம், ஒரே சுகாதாரம்” - பிரதமர் மோடியின் புதிய முழக்கம்
அனைவருக்கும் கல்வி கிடைக்க நீதிக்கட்சி வித்திட்டதாக கூறிய அவர், பின்னால் வந்த காமராசர், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததாக குறிப்பிட்டார். இன்றைய திமுக அரசு உயர்கல்விக்கும், ஆராய்ச்சி கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறிய முதலமைச்சர், அனைவரையும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சி என்றார். காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்தவர்களை முன்னேற்றுவதால்தான் சிலர் தங்களை எதிர்ப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆயிரம் ஆண்டு போராட்டத்தை ஒரு நூற்றாண்டில் மொத்தமாக துடைத்துவிட முடியாது என்றாலும், சமூகநீதி போராட்டத்தை தெடர்வோம் என குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு வர இருக்கும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் இணைந்து கொண்டாட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருப்பத்தை தெரிவித்தார்.
இதையும் படிக்க : திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து ஆய்வு- தமிழ்நாடு அரசைப் பாராட்டிய பீகார் அரசின் குழு
இதைத் தொடர்ந்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பீகார், ஹரியானா மற்றும் டெல்லியில் பாஜக பின்னடைவை சந்தித்திருப்பதாக கூறினார். பாஜகவை எதிர்க்க அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். வைக்கம் போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவை கேரளாவில் நடத்த இருப்பதாக கூறிய பினராயி விஜயன், அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், 2024-ம் ஆண்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்றார். சனாதனத்திற்கு எதிரான சக்திகளை ஒன்றிணைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடமாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மனுதர்மம் தற்போதும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மனு தர்மத்தை மீண்டும் அரியணை ஏற்ற பாஜக முயற்சிப்பதாக விமர்சித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, Periyar, Pinarayi vijayan, Thirumavalavan