காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீண்டும் போட்டியிடவுள்ளார்.
இந்தியாவில் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழகத்திலும் ப.சிதம்பரம் உள்ளிட்ட 6 எம்.பிக்கள் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இதில், திமுக கூட்டணிக்கு 4 இடங்கள், அதிமுக-வுக்கு 2 இடங்கள் கிடைக்க உள்ள நிலையில், காங்கிரசுக்கு ஒரு இடத்தை திமுக ஒதுக்கியது. திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக வேட்பாளர்கள் வேட்புமனுவையும் தாக்கல் செய்தனர்.
ஆனால், காங்கிரஸ் கட்சியில் எம்.பி. பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியானது. குறிப்பாக ப.சிதம்பரத்தின் பதவிக்காலமும் முடிவடைவதால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் சார்பாக ப.சிதம்பரமும், கர்நாடகா சார்பில் ஜெய்ராம் ரமேஷூம், ஹரியானா சார்பில் அஜய் மாக்கேனும், சத்திஸ்கர் சார்பில் ராஜீவ் சுக்லா, ரன்ஜித் ரன்ஜன், மத்திய பிரதேசம் சார்பாக விவேக் தான்கா, மகாராஷ்டிரா சார்இபல் இம்ரான் பிரதாப்கார்ஹி, ராஜஸ்தான் சார்பில் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி உள்ளிட்டோர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.