செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமரின் படங்கள் இடம்பெறவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கிய நிலையில், தமிழக அரசுக்கும் - பாஜகவினருக்கும் இடையிலான போஸ்டர் சண்டை முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான போஸ்டர்கள், தமிழக அரசின் சார்பில் சென்னை நகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் போஸ்டர்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது சர்ச்சைகளுக்கு தொடக்க புள்ளியாக அமைந்தது. போட்டியைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடியின் படம் இடம்பெறாதது ஏன் என்று பாஜக தரப்பினரால் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர், தமிழக அரசின் போஸ்டர்களின் மீது பிரதமர் மோடியின் படத்தையும் சேர்த்து ஒட்டினர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.அதன்பின்னர் செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் பாஜகவினர் ஒட்டிய பிரதமர் மோடியின் புகைப்படங்களை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கருப்பு மை ஸ்ப்ரே அடித்து அழித்தனர்.
தொடர்ந்து, பிரதமர் மோடி புகைப்படம் மீது ஸ்ப்ரே அடித்த தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட அமைப்பாளர் சசிகுமார், அரவிந்தன், சாரதி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தசூழலில், காவி வீரர்கள் என்ற பெயரில், பாஜக ஆதரவாளர்கள் ஓட்டியுள்ள போஸ்டர்கள் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்தவகையில் செஸ் போர்டு போன்று வடிவமைக்கப்பட்டுள்ள போஸ்டரில், இளையராஜாவின் படமும் இடம்பெற்றுள்ளது.
அதேபோல தமிழக பாஜக சார்பிலும் பிரமாண்ட செய்தித்தாள் விளம்பரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. போஸ்டர் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருப்பதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. செஸ் போட்டி துவக்க விழா விளம்பரங்களில், பிரதமர் மோடியின் படம் இடம் பெற உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பிடத்தக்கது.
அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் ஆனந்தி அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அதில், செஸ் ஒலிம்பியாட் தொடர்பான பத்திரிகை மற்றும் காட்சி ஊடக விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம்பெறுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் ஒருபுறம் நடக்க, தி.மு.க - பாஜகவினர் இடையிலான சதுரங்க ஆட்டமும் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Banners, BJP, Chess Olympiad 2022, DMK