சென்னை அடுத்த காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன்(39), வாடகை கார் ஓட்டி வந்தார். இவரது மனைவி பவானி (31), இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். தரணிதரன் கடந்த 22ம் தேதி கடன் தொல்லையால் துப்பட்டாவால் தனக்குத் தானே கழுத்தை இறுக்கி கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பூந்தமல்லி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார் இறந்து போன தரணிதரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசார் தெரிந்து கொண்டனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கழுத்து இறுக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். மேலும், அவரது செல்போன் அழைப்புகளை சோதனை செய்தபோது, ஒரு நபர் அடிக்கடி பேசி வந்ததும் தரணிதரன் இறப்பதற்கு முன்பு அந்த நபர் வீட்டிற்கு வந்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பவானியிடம் தீவிரமாக விசாரித்தபோது கணவனை கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்த திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
இதில் கொலை செய்யப்பட்ட தரணிதரனின் நண்பரான பூந்தமல்லி திருமால் நகரைச் சேர்ந்த தினேஷ் (31), என்பவரும் டிரைவராக உள்ளார். இருவரும் ஒன்றாக மது அருந்துவார்கள். இதனால் அடிக்கடி தரணிதரன் வீட்டிற்கு வரும்போது தினேசுக்கும், பவானிக்குமிடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. தினேஷ் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தங்களது கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இதனால் கடந்த 21ம் தேதி பூச்சி மருந்துக்கடையில் இருந்து பூச்சி மருந்தை வாங்கி வந்து உணவில் கலந்து கொடுத்து விடும்படி பவானியிடம் தினேஷிடன் கூறி விட்டுச் சென்றுள்ளார்.
இரவு போதையில் வந்த தரணிதரனுக்கு அவரது மனைவி இரவு உணவில் பூச்சி மருந்தைக் கலந்து கொடுத்துள்ளார். அதனைச் சாப்பிட்டு விட்டு தூங்கிய தரணிதரன் 22ம் தேதி காலையில் வழக்கம் போல் எழுந்து வாந்தி மட்டும் எடுத்து விட்டு காபி குடித்துவிட்டு தன்னை பத்து மணிக்கு எழுப்பி விடுமாறு கூறிவிட்டு மீண்டும் தரணிதரன் தூங்கச் சென்று விட்டதாகவும் பூச்சி மருந்து கொடுத்தும் கணவன் சாகாததால் ஆத்திரமடைந்த பவானி கள்ளக்காதலன் தினேசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
Also read: சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்க புதிய திட்டம் - சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
தினேஷ் வீட்டிற்கு வருவதற்குள் தனது இரண்டு மகள்களையும் மாடியில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார். தினேஷ் வீட்டிற்கு வந்ததும் படுத்துக் கொண்டிருந்த தரணிதரனை திருப்பி கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்துள்ளார். இதில் மனைவி கண் எதிரே தரணி தரன் துடி, துடித்து இறந்து போனார். பின்னர் அவரே தற்கொலை செய்து கொண்டது போல் துப்பட்டாவின் இரண்டு பகுதிகளையும் தரணி தரன் கையில் சுற்றி விட்டு தினேஷ் அங்கிருந்து சென்று விட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் இதனை மறைப்பதற்காக கடன் தொல்லையால் தனது கணவர் தனக்கு தானே கழுத்தை இறுக்கி தற்கொலை செய்துகொண்டது நாடகமாடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் பவானிக்கு அதே பகுதியில் வேறு ஒரு நபருடன் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியானது போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தரணிதரன் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து வீட்டில் இருவரும் போலீசார் முன்னிலையில் நடித்துக் காட்டினார்கள். அதனை போலீசார் வீடியோ பதிவும் செய்துள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை மனைவியே கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்ததால் தற்போது இரு மகள்களும் பெற்றோர் ஆதரவின்றி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.