கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் 5-ஆவது நாளாக தொடரும் நிலையில், சுத்திகரிக்கப்படாத தண்ணீர், கேன்களில் அடைத்து விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்து கேன்களில் அடைத்து விற்கும் ஆலைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணையும் நாளை நடைபெறுகிறது. அனைத்து ஆலைகளுக்கும் அனுமதி வழங்கக் கோரி கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சென்னை திருவான்மியூர் பகுதியில் கேன் குடிநீர் தட்டுப்பாட்டால் 4 நாட்களாக மூடப்பட்டிருந்த சில டிபன் கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. தங்கு தடையின்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சிலர் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை கேன்களில் அடைத்து விற்பதாக கூறும் தரமணி பகுதி மக்கள், சமைப்பதற்கு தண்ணீர் இல்லாததால் ஹோட்டல்களில் சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கேன் குடிநீர் உற்பத்தியாளர்களில் சிலர் தண்ணீர் சப்ளை செய்வதாக கூறும் சில்லறை விற்பனையாளர் கார்த்திக், முன்பை விட அதிக கேன்கள் விற்பனையாவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை புறநகரான மதுரவாயல், பூந்தமல்லி பகுதிகளில், எந்த தண்ணீர் சுத்திகரிப்பு நிலையமாவது திறந்திருக்குமா என தள்ளு வண்டிகள், லோடு ஆட்டோக்களில் காலி கேன்களோடு மக்கள் அலைந்து திரிகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு குடிக்கக் கூட தண்ணீர் கொடுக்க முடியவில்லை என ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
கேன் குடிநீர் சில இடங்களில் 100 ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்பட்டாலும், உச்சகட்ட தட்டுப்பாடு என்ற நிலை இன்னும் ஏற்படவில்லை. நீதிமன்றத்தை நாடியுள்ள உற்பத்தியாளர்களின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதை அறிய பொதுமக்கள் தவிப்புடன் உள்ளனர்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Drinking water