கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் கவுதம் (28). இவர் மீது ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ராம் கொலை வழக்கு உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் அடிதடி, மோதல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கவுதமின் கூட்டாளியான கோகுல் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை நீதிமன்றம் முன்பு கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். கவுதம் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை போலீசார் தேடி வந்தநிலையில், கவுதம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "தான் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை அடிதடியில் ஈடுபட்டு வந்தேன். என் மேல் 10 முதல் 15 வழக்குகள் உள்ளன. திருமணத்துக்கு பிறகு எந்த விவகாரத்திலும் ஈடுபடவில்லை. மனைவி, மாமியார், அவரது சகோதரி மீது போலீஸார் கஞ்சா வழக்கு போட்டுள்ளனர்.
என் மீது 7 வழக்கில் வாரண்ட் உள்ளது. இதற்காக என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல பார்ப்பது நியாயம் இல்லை. நான் திருந்தி வாழ நினைக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் நீதிமன்றத்தில் சரண்டர் ஆகி விடு, இல்லாவிட்டால் சுட்டுப் பிடிக்க வேண்டி இருக்கும் என்று போலீசார் தெரிவித்ததாக" வீடியோவில் பயந்து கதறி பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.முன்னதாக, கஞ்சா வழக்கு தொடர்பாக கவுதமின் மனைவி, அவரது சகோதரி, மாமியார் ஆகியோரை போலீசார் சமீபத்தில் கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில் சமீப காலமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் போலீசாரிடம் வழக்குகளில் இருந்து தலைமறைவாக இருக்கும் சில ரவுடிகளை பிடிக்க செல்லும் போது, 5 சம்பவங்களில் போலீசார் சுட்டுப் பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனைப் பார்த்து ரவுடி கவுதம் பயந்து வீடியோ வெளியிட்டதோடு மட்டுமல்லாது, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைய வந்துள்ளார்.
இந்த நிலையில் எஸ்கார்டு போலீஸ் இல்லாததால் நாளை வந்து ஆஜராகும்படி மேஜிஸ்ட்ரேட் தெரிவித்திருந்த நிலையில் ரவுடி கவுதம் கிளம்பி சென்றார். வெளியில் இருந்தால் காவல்துறையினர் தன்னை சுட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தில் பல வழக்கறிஞர்களோடு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று மாலை மீண்டும் வந்து ஆஜரானார். பின்னர் ஆஜரான ரவுடி கவுதமை வருகின்ற 22 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து ரவுடி கவுதமை போலீசார் சிறையில் அடைத்தனர்.
தற்போது தமிழக காவல்துறை ஆப்ரேசன் பிடிவாரண்ட் என்ற சிறப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளனர். பல நாட்களாக விசாரணைக்கு ஆஜராகாத ரவுடிகளை, குற்றவாளிகளை பிடிக்க போலீசார் யூகம் வகுத்து வருகின்றனர். தாங்களும் இனி வழக்குகளில் இருந்து தப்ப முயன்றால் சுட்டு பிடித்து விடுவார்களோ என்ற அச்சம் ரவுடிகள் மத்தியில் பரவியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல ரவுடிகள் வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்துக்கு படையெடுப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News