தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் பேரிடர் மீட்பு படையினர் 43 ,000 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவமழையின்போது தான் தமிழகத்தில் அதிகப்படியான மழை பெய்கிறது. இந்த காலகட்டத்தில்தான் தமிழகத்தின் இயல்பான மழை அளவில் 47.32 சதவீத மழை கிடைக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. 16-ஆம் தேதி(நேற்று முன்தினம்) வரை இயல்பாக கிடைக்க வேண்டிய 287.9 மில்லி மீட்டர் மழை அளவில் 180.7 மில்லி மீட்டர் மழை மட்டுமே கிடைத்துள்ளது. இது இயல்பான மழையளவை விட 37 சதவீதம் குறைவு.
தற்போது வரை சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இயல்பான அளவும், 31 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் 4,133 பகுதிகள் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைப்பதற்காக 4,713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா நோய் தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு கூடுதலாக தற்காலிக தங்கும் மையங்களாக பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் என 4,680 இடங்கள் தயார் நிலையில் உள்ளன. பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களை நிர்வகிக்கவும் 662 பல்துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பேரிடர் காலங்களில் உடனடியாக செயல்பட 43,409 முதல்நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர்.
இவர்களுடன் கால்நடைகளை பாதுகாக்க கூடுதலாக 8,871 முதல்நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். நீரில் மூழ்குபவர்களை காப்பாற்ற நீச்சல் வீரர்கள் தயார்நிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினரிடம் பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள், 4,699 தீயணைப்பு வீரர்கள், 691 ஊர்க்காவல் படையினர், 9,859 தன்னார்வலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயாராக உள்ளனர்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் அறிவுரை வழங்க அனைத்து மாவட்டங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவசர தொடர்புக்கு மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற எண்ணிலும், மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தற்போது பெய்து வரும் மழையால் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அனைத்து அணைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.