கடந்த திமுக ஆட்சிகாலத்தில் சிங்கார சென்னையாக மாற்றிட, பார்த்த இடமெல்லாம் பாலம் கட்டினோம் என்று கூறியவர்கள், வெள்ள நீரை வெளியேற்ற மழைநீர் வடிகால் அமைக்காதது ஏன் என்று கூறி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திமுகவை விமர்சித்துள்ளார்.
இது குறித்து ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழையால் நீர் ஆதாரம் பெரும் , இதில் தென்மேற்கு பருவமழை மூலம் கேரளா, ஆந்திரா , கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் கிடைக்கும். அதனை தொடர்ந்து அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் வடகிழக்கு பருவமழையில் தமிழகத்திற்கு முழுமையான நீர் ஆதாரம் கிடைக்கும்.
இந்த மழைகாலங்களில் கனமழை , சூறாவளி காற்று, புயல், போன்ற இயற்கை பேரிடர்கள் உருவாகும். இந்த காலங்களில் கடந்த அம்மா ஆட்சி காலங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக அம்மா அரசை தலைமை தாங்கி நடத்திவந்த மாண்புமிகு முன்னாள் முதமைச்சர் எடப்பாடியார் மற்றும் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் ஒ.பி.எஸ் அவர்களின் வழிகாட்டுதலோடு கஜா, நிவர், புரவி, மற்றும் சென்னையில் மிகப்பெரிய பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் ஏற்பட்டபோது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபட்டது.
குறிப்பாக சென்னையில் ஒரு லட்சம் தெருக்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ 36,000 மழைநீர் தேங்குமிடங்கள் இருந்தன. அம்மா அரசின் போது எடுக்கப்பட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், அவை 40 நீர் தேங்கும் இடங்களாக குறைக்கப்பட்டன. அது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் கடந்த அம்மா ஆட்சிகாலத்தில் 1,20,000 சிறு குறு பாலங்கள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்களில் அடைப்புகள் சரிசெய்யப்பட்டன.
குறிப்பாக சென்னையில் மழைநீரை வெளியேற்றும் வகையில் ராட்சத மோட்டார் மூலம் உடனுக்குடன் வெள்ளநீர் அப்புறப்படுத்தப்பட்டது. கடந்த அம்மா (ஜெயலலிதா) ஆட்சிகாலத்தில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் செய்யப்பட்டன. தற்போது மீதமுள்ள பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும். அப்போதுதான் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
வட கிழக்கு பருவமழை குறித்து எடுத்த நடவடிக்கைகள் பலன் கிடைக்கவில்லை என்று மக்கள் கருதுகிறார்கள், அம்மா அரசின் மீது பழிசுமத்துவதை விட்டுவிட்டு சீரமைக்கும் பணியில் அரசு துரிதமாக செயல்படவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தற்போதைய முதலமைச்சர் சென்னை மேயராக பணியாற்றி உள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். சென்னைப்பற்றி நன்கு அறிந்தவர். சிங்கார சென்னையாக மாற்றிட பார்க்கும் இடமெல்லாம் பாலங்கள் கட்டினோம் என்று பறைசாற்றி வருகிறார். ஆனால் வெள்ளநீரை வெளியேற்ற வடிகால் அமைக்காதது ஏன் என்று மக்கள் இன்றைக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இந்த வட கிழக்கு பருவமழையால் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளன. இந்த வட கிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரையில் உள்ளது. ஆகவே பழுந்தடைந்த குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் வாகன விபத்து அதிக அளவில் ஏற்படுகிறது. ஆகவே இந்த சாலைகளை தற்காலிக செப்பணிட பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏற்கனவே அம்மா ஆட்சிக்காலத்தில் இது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது .
Must Read : ஒமைக்ரான் வைரஸ் : 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடு
ஆகவே இந்த வெள்ள நிவாரணப்பணிகளில் போர்கால நடவடிக்கை எடுத்து முன்மாதிரியாக அம்மாவின் அரசு செயல்பட்டதை போல, அதை பின்பற்றி தற்போதைய அரசு வெள்ளநிவாரணப்பணிகளில் செயல்பட்டு மக்களை காத்திட வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Rain, DMK, R.B.Udhayakumar